Tuesday, 23 May 2017

முன்காலை சிறுமழை

முன்காலை ஈருருளி 
பயணத்தில்  வண்ணமில்லா 
நீர்ப்பூக்கள் முகத்தில்
ஒத்தடம் கொடுத்தபடி இருந்தன..!!

தலைக்கவசத்தை நெகிழ்த்தி 
 சற்றே மழை ஆசீர்வாதத்தை 
பெற்றுக்கொண்டேன்..!

மழை மகளின் ஓரப்பார்வை 
பெருநகர மக்களின் 
மீது சிறுமழையாக விழுந்தது..!!

நிலமகள் கொஞ்சம் மகிழ்ந்து 
ஆவலுடன் 
அள்ளிப் பற்றிக்கொண்டாள்..!
மெல்ல மேனி சிலிர்த்து 
ஏக்கத்துடன் 
மண்வாசனைப் 
பெருமூச்சுவிட்டாள்..!!

இன்னும் கொஞ்ச நேரம் 
உன் கருணை விழிகள் 
எமக்காக 
திறந்திருக்கலாம்..!!

ஆசையோடு நாங்கள் 
நீரள்ளிப் பருகியிருக்கலாம்..!!


----- அனலோன் 

Thursday, 4 May 2017

நீயில்லாத வீடு..

நீயில்லாத வீடு..வெறும் சுவர்ப்பரப்பே ..!!
விடாது ஒலிக்கும்
அழைப்பு மணியைப் பொருட்படுத்துவதில்லை 
அங்கங்கே சிதறிக்கிடக்கும் 
துணிகளும், வாரவிடுமுறையில் வாங்கிய உணவுப்பொட்டலங்களும்..!

கலைந்தே கிடக்கும் படுக்கை..
சிற்றெரும்பென இரவுகளில் அதில் 
ஊர்ந்து பின்காலையில் விழித்தெழுகிறேன்..!!

கரப்பான்களும், இன்னபிற 
பூச்சிகளும் 
அதனதன் விடுமுறைக்களிப்பில் சுதந்திரமாக 
திரிகின்றன..!! நீயிருக்கும் வரை அவை 
அண்டியதில்லை..!!

மின்விசிறிகள் நிறுத்தப்படுவதில்லை 
விளக்குகள் எரிந்து எரிந்து எரிகின்றன..இரவிலும்..!
முற்றிலும் விடுமுறைக்கால நகராட்சி பள்ளியாய் 
உணர்விழந்து கிடக்கிறது 
சமையலறை..!!

நீ உலவிய மிச்சங்கள் 
வரவேற்பறையின் காற்றில் எப்போதும்..!!
அழுக்கேறிய துணிகளும் 
மடிப்புலைந்த ஆடைகளுமாய் அலமாரி ..!!
கலையாமல் அடுக்கு குலையாமல் 
ஆடைகளை எடுப்பது எப்படி..?

வீடு வீடாக இருப்பதில்லை..
நான் நானாக மட்டுமே இருக்கிறேன்.. 
நீயில்லாமல் ..!!

தன்னிச்சையாக பொருட்கள் அதனதன் 
இடத்தை அடைகின்றன நீ வந்தவுடன்..!!
சர்வத்தையும் இயங்கச் செய்து 
கான்க்ரீட் சுவர்ப் பரப்பை 
உயிர்க்கச் செய்கிறாய் 
ஒற்றைக் காலடி வீட்டினுள் 
எடுத்து வைத்து..!!

--- அனலோன் 


இரயில் விட்டுச் சென்ற வெறுமை



சிறுநகர புகைவண்டி 
நிலையத்தில் காத்திருந்திருக்கிறீர்களா ...?
நீங்கள் பயணிக்க வேண்டிய 
வண்டியைத் தவற விட்டிருக்கிறீர்களா ..?

நம்மைநோக்கி பச்சைக்கொடி காட்டி 
கடந்து செல்லும் 
நமக்கான வண்டி விட்டுச் செல்வது பல 

இரயில் கடக்க காத்திருந்து 
தம்மைத்தாமே ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் 
இரட்டைத் தடங்கள் ..!!
அதிர்ந்தடங்கும்     நடைமேடை..

சற்றுத் தயங்கிப்பின் 
தன் குட்டிகளுடன் தண்டவாளம் தாண்டி கடக்கும் 
நாயொன்று..!!

பொதிமூட்டை சுமந்து 
அரைகுறை வாய்க்காலில் 
துவைக்க செல்லும் மூதாட்டி கடந்து 
செல்கிறாள்..!!

டீ விக்கும் பையன் 
மெதுவாக தன் 
செல்பேசியைத் தடவி பார்க்கிறான்..!!

பறந்தமர்ந்த காகங்கள் 
நிலைய கூரைக்குள் 
கரைந்து  அலைகின்றன..!!

அடுத்த வண்டி வருமுன் 
அதனதன் காட்சிகள் 
அரங்கேறுகின்றன..!!
அதன்பின் அதுவே தொடர்கின்றன ..!!

----- அனலோன் 

ஆதலால் நான் ...

காய்ந்த சருகுகளினிடையே 
ஒரு சிற்றுயிரைக் 
கண்டு விலகி நடப்பீர்  எனில் 
நீரும் புத்தனே ..!!

தேங்கிய மழை நீரில் சிறிது 
கால் நனைத்து 
விசிறுவீர் என்றால் நீரும் 
குழந்தையே ..!!

சாலையில் நசுங்கிக் 
கிடக்கும் குழந்தையின் 
ஒற்றைச் செருப்பைக்காணுகையில் 
பதறுவீர் என்றால் நீரும் தகப்பனே..!!

ஓங்கிய பெருங்காற்று வீசுகையில் 
சேரிக்குடிசைகளை 
நினைத்து உளம் தவிப்பீர் எனில் 
நீரும் தலைவனே..!!

சகமனிதன் பசியால் துடிக்கையில் 
பதறி ஓடி 
பரிமாறுவீரா..?? நீரும் 
பரிசுத்த தேவனே ..!!

---- அனலோன்

பெண்கொண்ட பெருங்காதல்

நிலவுகள் கூடி 
பெண்மை சமைத்ததோ..

பெருவண்ணம் குழைந்து 
பேரின்பம் அமைத்ததோ..

ஆரிருள் இணைந்து
அணங்கென ஆனதோ....

இசையருள் இயைந்து
இன்பம் ஆனதோ...

இயற்கையென எண்ணி
தன்னுள்ளம் தான்
மயங்குதோ

மானிணை கண்டு
மானுட எண்ணம்
தான் கிறங்குதோ...

ஏனிங்கு..ஏனிப்படி.. என்று
எண்ணியிங்கு ஏங்குதோ

இது இப்படித்தான்..
அது அப்படித்தான்.. என்று
இயற்பியல் மீறுமோ...

இனி எது...? துணை எது...?
என தம் .. பிணை
தான் வினவுமோ..?

பெண்கொண்ட பெருங்காதல்
தரணியை
ஆளுமோ...?

--- அனலோன்

சாபம்




பின்னிரவு மழையாய்ப் 
பெய்வதும்,

பின்மதிய, தனித்த 
மரநிழலற்ற
நெடுஞ்சாலைப் பயணமும் 

சற்று  கொடுமையான சாபமே...

நடு இரவில் காமுற்ற 
இளங் கைம்பெண்ணைப் போல..!!

 ---- அனலோன் 

பாடாண் திணை


விலகிடாத நேசம் ...!!



எண்ணியிராத நொடியொன்றில் 
அலைத்துமி என 
உன்  முகம் கண் முன் 
வந்து போகும்..!

பின்னொரு நாளில் 
சாலை கடக்கத் 
தயங்கும் பள்ளிக்குழந்தையின் 
பரிதவிப்பில், உன்  கை பிடித்து 
அலைந்த கணம் 
மின்னிச் செல்லும்..!!

எங்கோ எவ்வண்ணமோ 
இருந்திருக்க வேண்டிய நாம் 
சட்டென ஒரு புள்ளியில் 
விலகியிருக்க வேண்டாம்..!!

அந்நேர வலிதனை 
மரண நொடியின் வேதனைதனை 
ஒத்திபோட்டு ஒத்திப்போட்டு 
ஆழ் மனதின் இருண்ட 
அறைகளுக்குள் 
அமிழ்த்திஇருக்க வேண்டாம்..!!

நாம் இருவருமே 
அறிந்திருக்கவில்லை இவ்வண்ணம் 
நடக்குமென..

அல்லது நாமிருவருமே 
அறிந்திருந்தோம் ..இவ்வண்ணமே 
நிகழுமென ..!!

என் சொல்லி என்ன ஆவது ..?
தனித்தனி குடும்பங்கள், குழந்தைகள் இன்று.

ஆயினும், பண்டிகை தினம் 
புது ஆடை ஒன்று அணியும்போதோ ..

அலைநுரை காலடி பரவி 
மண்ணரித்து மீள்கையில், தெளிந்து 
வரும் சிப்பிகள் போல 
உன் நினைவுகளை 
உதற முடிவதில்லை...!!

-------- அனலோன்