Thursday, 13 July 2017

கதிராமங்கலமும், முதிரா அரசும் ..!!

காணி நிலத்தில் பத்துப்பன்னிரெண்டு தென்னைமரம் 
கேட்டான் எங்கள் பாரதி..!!
கூடவே மீத்தேன் தென்றலையும் வழங்கிடுவோம்..!!


குயிலோசை கொஞ்சம் ஒலித்திட ஆசை கொண்டான் 
அவற்றுடன் ஆழ்துளை இயந்திர பேரிசையையும் 
கொடுத்திடுவோம்..!!

ஆழங்களில் உறையும் கரியமில அரவங்களை 
தட்டி எழுப்புகிறோம் ..
அவை ஆற்றப்போகும் பேரழிவென்ன 
யாமறியோம்..!!

தேர்தல் நேர வாக்குறுதிகளாய் 
பசுமையான  டெல்ட்டா பகுதி ..
மிச்சமென்ன இருக்கப்போகிறது, நம் பிள்ளைகளுக்கு 
இன்றே காட்டிவைப்போம்..!!


தேனினிக்கும் கிணற்று நீர்,
வெள்ளி மீன் துள்ளிய ஆற்று நீர் 
இனி புண் சீழ் கழுவிய 
சேற்று    நீர்தானோ..??

அகண்ட காவிரி நலிந்து போனாள்..
மெலிந்த மார்புகளில் இரத்தம் 
உறிஞ்சுவீரோ..??
கண்மாய்களில் பறந்தலைந்த 
நாரைகள் 
இறந்தொழிந்த சேதி 
அறிந்தீரோ..?

பூமித்தாயின் மடி கருக்கியபின் 
 கூடிப் பேய்கள்   வாழ்வீரோ 
இவள் வயிற்றுப் பிள்ளைகள் தானே..
இரும்புப் பாளங்கள் கொண்டு 
பெருவயிற்றைப் பிளப்பீரோ..??


நீள்துயில் தங்கள் கொள்கையென 
எங்களுக்கு ஓர் அரசு..!
கைகட்டி வாய்பொத்தி பெருமன்னனின் 
சீழ்க்கை ஒலிக்கு 
அடவு கட்டி ஆடுது எங்கள் அரசு..!!

கொள்கை என ஒன்றில்லை 
உங்களுக்கு..... வீணர் 
சொல்நம்பி, சென்மப்பிழை 
செய்தோம் ...!! 


வெண்ணாடை உடுத்தி கீழ்க்கும்பிடு
 போட்டு   வந்தவர்க்கு,
எங்கள்    மரண சாத்தென அறியாமல் 
ஓட்டளித்தோம்...

தீங்கிழைத்தோம் வருந்தலைமுறைக்கு...
மீள மாட்டோம்  இப்பாவத்தினின்று...!!


-----அனலோன் 

பிறழ்வும் பிரக்ஞையும்

சொல் திரளாத வயதின் 
நாட்களில் தான் அவளை அறிந்தேன்..!!
இனம் புரியா பிரியம் தான் 
நான் அடைந்தேன்..!!

சிறு மானசீக 
ஸ்பரிசங்களின் வழியே 
என்னுள் அவளும்,
 அவளுள் நானும், எங்களின் தனிமையைத் 
துரத்திக்கொண்டிருந்தோம்..!!

வலசைப்பறவைகள் 
திசை தேர்வதைப்  போலவே 
இருவருக்குமான தூரங்களை 
கடந்து சென்றிருந்தோம்..!!

மேய்ப்பனின் குரல் 
கேட்டவுடன் துள்ளிக்குதிக்கும் தொலைந்து போன 
ஆட்டுக்குட்டியென 
அவள் குறுஞ்செய்தி அட்ரீனலினைத் 
தளும்பச்செய்யும்..!!


சீவிடுகளின் மெல்லிய ரீங்காரமென 
நாம் உரையாடிய சொற்கள் 
காற்றில் அலைந்து மிதந்து 
கொண்டிருக்கும்..!!

அங்கிங்கெனாதபடி 
எத்திசை நோக்கினாலும்,
எவ்வண்ணமும் உன்  வண்ணமே 
எனத் தோன்றும் மாயத்தை என்ன செய்ய..??


வர்ணனைகளின் மேல் உனக்கு 
நம்பிக்கை இல்லையெனினும் 
எனது கவியால்  உன் செவிநிறைக்க 
விழைவாய்...!! ஒருகணம் ஒருகணம் 
என குழவியாய் மனம் பிறழ்வாய்..!!


நீள்நதி ஓரமாக உன் 
நினைவருந்தி நடக்கையில் 
என் கை உன் மேலாடையைப் 
பற்றியிருந்த கோலத்திலேயே இருக்கும்,
நீ இல்லையென்றாலும் கூட..!!


அடியாழத்திற்கு அமிழ்த்தி 
வைத்து  சிரிக்கிறோம் 
 நமதே நமதான 
நினைவுகளை...
அவை காற்றின் அலைகளென்ற 
பிரக்ஞையே இல்லாமல்..!!


---- அனலோன் 

நிச்சயமில்லா நிச்சயங்கள்...

அலைகளுக்கும்
கரைக்குமான 
தூரம் அளக்கப்படுவதில்லை..!!

எழுந்தடங்கி, தவித்தலைந்து 
ஒவ்வொருமுறை 
முயன்றும் 
கரையின் கரையானது 
விரிந்தபடியே  செல்கிறது..!!

இதுதான் கரையின் 
எல்லை என 
கணக்கிட்டவர் உண்டோ..?!!

புலரி விடியும் நொடிப் பொழுதோ 
பூவின் மொட்டு விரியும் 
கணப்பொழுதோ 
வரையறுக்கப்பட்டதில்லை..!!

மின்னற் சங்கிலி 
வெட்டி எழும்  நொடியின் நொடியில் 
தோன்றி மறைகிறது 
தோட்டத்து தென்னங்  கீற்று..
அதே காட்சி 
மறுபடி தோன்றும் என்பது 
நிச்சயமில்லை..!!

கூடமர்ந்த கூகையின் 
சோம்பல் உதிர்த்த சிறகொன்று 
சென்று சேரும் 
இடமும் அறியக்கூடுவதில்லை..!!


---- அனலோன் 



காவியின் நிறம் கருப்பு

கோவில் பல 
நிறைந்த 
சிறுநகர தஞ்சையில் 
நினைவறிந்த நாள் முதல் 
அத்தர் மொஹல்லா மசூதியின் 
பாங்கு ஒலி கேட்டே 
விழித்திருக்கிறோம்..!!


சந்தனவாசம் வீசும் 
மயில்தோகை கொண்டு 
குறுந்தாடி முல்லா 
கையால் 
மந்திரித்ததும் உண்டு..!!


தூய.அந்தோணியார் பள்ளியில் 
பரமபிதாவையும், சூசையப்பர் 
திருத்தல பிரார்த்தனையையும் 
கடந்து 
தேர்வுகளை நாங்கள் சந்தித்ததில்லை..!!


பிரகதீஸ்வர சிவசந்நிதியும், கோட்டை 
தேவாலயமும், நாகூர் தர்காவும் 
எங்களுக்கு 
போதித்தது அன்பை மட்டுமே..!!


நாதஸ்வரங்கள் முழங்க 
நாகூர் கந்தூரி திருவிழாவில் 
ஹஸ்ரத் ஷாகுல் ஹமீதை 
தரிசிக்கிறோம், வேளாங்கண்ணி மாதாவையும் 
வணங்குகிறோம்..!!


கிருஷ்ணனின் மூத்தவனாம் 
அரிஷ்டநேமி, அருகனடி 
அறிந்திருக்கிறோம்..!!


புதுக்காவிகள் எங்களுக்கு 
தேசபக்தியை ஊட்டத் 
தேவையில்லை..!!
வன்மம் பலபேசி குடும்பம் 
கலைப்பார் வாழ்ந்த 
சரித்திரம் இல்லை..!!

அன்பெனும் மதம் ஒரு காட்டாறு;
மதங்கள் அதில் கலக்கும் 
சிறுநதிகள். காட்டாறு தன்வழி கண்டு 
தயக்கங்கள் உடைத்து தரணியை 
வாழச் செய்யும்..!! மனிதம் வாழச் செய்யும்..!!

மதங்களை விட மனிதம் 
நம்புகிறோம்..!!
தெளிந்த வானம் 
எங்களுக்கு மேலே விரிந்து கிடக்க 
தேவன் அருள் பெற்றே 
வாழுகின்றோம்..!!


---- அனலோன் 

நெகிழிகள் நெகிழ்வதில்லை..

முக்கண்ணன் முதல்வன் என 
பேறுபெற்றாய்,
இருந்தும் 
பேரவனியில் பெருந்துயர் உற்றாய்..!!


கருத்த சரீரம் 
சூல்கொண்ட மேகமென பாடல் பெற்றாய்,
ஆனால் 
சிறுவுடல் தெருநாயென 
துயரப்பட்டாய்..!!


பிடியானை தலைமையில் 
குடும்பம் கொண்டு,
 கொற்றவை போல் 
குலம் காத்தாய்..!!


நீ நடந்த தலைமுறைப் பாதையெங்கும் 
விடுதி கட்டி, வீடுகட்டி, 
அடங்காமல் 
சுயநல மாந்தர் யாம் 
 மின்வேலியும் 
அமைத்து வைத்தோம்..நாங்கள்..!!


நகரும் பாறைக்குன்றென 
மேய்ச்சல் நிலம் தேடி 
நித்தம் அலைந்து அல்லலுற்றாய்..!!


சில்லறைக்காசுக்காக 
சுட்டெரிக்கும் வேளையில் 
கையேந்தி இரக்கும் போது 
காட்டரசனின்  இறந்த 
காலங்கள் கண்முன் வந்து போகுமோ..?

கன்று, குட்டி கூட்டிச்சேர்த்து 
கதையாடிச் 
செல்கையில் 
இருப்புப்பாதை எமனாக 
இடித்துத் தள்ளி 
குலமழித்தோம் மனிதர் நாங்கள்..!!


குடித்துக் கூத்தாடி 
கண்ணாடிப் போத்தல்கள்,
காற்றிலலையும் நெகிழிகள்,
வன்மம் கொண்டு 
காட்டிலெறிகிறோம் நாங்கள்..!!


பசித்தலைந்து நீ திரிகையில் 
பசும்புல் தன்னுள் மறைந்த 
நெகிழிப்பைகளை உண்கிறாய்..!!
வஞ்சமறியா வயிற்றினுள் 
நெகிழிகள் நெகிழ்வதில்லை..!!


மென்பஞ்சு பாதத்தில் 
சீழ் சேர்ந்து, புழு அடைந்து 
ஜீரணம் கொள்ளாமல் 
சீக்கில் நீங்கள் சாகும்போது 
குரூரமாக 
குதூகலிக்கிறோம் நாங்கள்..!!


என்றோ ஒருநாள் 
வஞ்சினம் கொண்டு 
நீ 
ஊர்புகுந்து 
பலிகொள்கையில் 
திகைத்தடங்கி சாகிறோம்..
சிற்றுயிர் ஜீவனாக நின் 
காலடி பணிகிறோம்..!!


--- அனலோன் 

பூமகள் மழலை..!!

வான்மேகம் தான் 
அனைத்தும் அவள்
படைத்தாள்..!!

பூமலர்தேகம் தாம்
கொண்டு
பூவுலகில் அழகு
சமைத்தாள்..!!

கருநீல கூந்தல்
அமைந்து
கார்மேகம் அதற்கு
சவால் அமைத்தாள்..!!

மானின் இரு கண்கள்
கொண்டு
மாந்தர் தம் பணி
மறக்கச் செய்தாள்..!!

அவள் சிறுகை பற்றி 
கடலலை 
தன்னில் கால் நனைக்கையில் 
நெஞ்சு நிறைய வைத்தாள்..!!

 
கோயில் சென்று 
மீள்கையில் கூடவே 
தேவதையொன்று வரும்போல் 
எண்ண வைத்தாள்..!!

அன்றன்று பள்ளி 
நிகழ்வுகள் பாங்காய் அவள்
மழலைப் பேச்சு  
பகர்கையில் 
பாவேந்தன் திடுக்கிடுவான்..!!
பாரதியும்
தோற்றிடுவான்..!!  

--- அனலோன் 

கணத்தில் ஒரு துளி

தன்னொளி கிறங்கி, 
இறக்குமதி போத்தலுடனான 
ஒரு 
பின்னிரவில், எளிய 
மின்னணு அலைவரிசை மீதேறி  
எனது செல்லிடப்பேசியில் 
வந்தொளிர்ந்தது குறுஞ்செய்தி, 
"சத்யா " எனும் உன் பெயர் தாங்கி..!!


எத்தனையோ நாள் 
எரிந்து விழுந்திருக்கிறேன் 
உன் குறுஞ்செய்தி 
எதிர்பார்க்கையில் வந்து விழும் 
வங்கிக்கடன் விளம்பரங்கள் கண்டு..!!

ஒரு மாலைநேர மழையினூடே 
நம்மிடையே உண்டான 
பிணக்கு கணந்தோறும் வளர்ந்து 
உருமாறுமென நீயோ நானோ 
நினைத்திருக்கவில்லை..!!

எத்தனையோ நாள், 
அறுந்து போன நம் உரையாடல்கள்  
காற்றின் அலைவரிசையில் என்னைப் 
பின்தொடர்வதை 
உணர்ந்திருக்கிறேன்..!!


முடிவிலியென 
பரந்து விரிந்திருக்கும் 
இப்பிரபஞ்ச பெருவெளியில் 
நாம் பரிமாறிக்கொண்ட முத்தங்களின் 
ஈரப்பதமும் 
கலந்திருக்குமோ..?


நாம் 
சொல்லொணாத் துயருடன், 
அருகருகே பயணித்தாலும் 
தொட்டுக்கொள்ள முடியாத 
புகைவண்டித் தடங்கள் தாமோ..?


ஆனால்,
யதார்த்தங்களின் சிடுக்குகள் 
நிறைந்த இவ்வுலகில் 
இத்தனை நாள் காதலெனும் 
பெருஞ்சரடு மட்டுமே நம்மை இதுவரை 
பிணைத்து வந்திருக்கிறது..!!



கிளையமர்ந்த சிறுபறவை 
விண்நோக்கி எழும், கணத்தின் 
ஒரு துளியில் நம் காதல் 
பேருருவம் கொள்ளும்..!!
எக்கணம் ..? அக்கணம் ..?
மரணமோ ..பின்போ ...முன்போ ..
எக்கணமும் சாத்தியமே..!!



---அனலோன்