சொல் திரளாத வயதின்
நாட்களில் தான் அவளை அறிந்தேன்..!!
இனம் புரியா பிரியம் தான்
நான் அடைந்தேன்..!!
சிறு மானசீக
ஸ்பரிசங்களின் வழியே
என்னுள் அவளும்,
அவளுள் நானும், எங்களின் தனிமையைத்
துரத்திக்கொண்டிருந்தோம்..!!
வலசைப்பறவைகள்
திசை தேர்வதைப் போலவே
இருவருக்குமான தூரங்களை
கடந்து சென்றிருந்தோம்..!!
மேய்ப்பனின் குரல்
கேட்டவுடன் துள்ளிக்குதிக்கும் தொலைந்து போன
ஆட்டுக்குட்டியென
அவள் குறுஞ்செய்தி அட்ரீனலினைத்
தளும்பச்செய்யும்..!!
சீவிடுகளின் மெல்லிய ரீங்காரமென
நாம் உரையாடிய சொற்கள்
காற்றில் அலைந்து மிதந்து
கொண்டிருக்கும்..!!
அங்கிங்கெனாதபடி
எத்திசை நோக்கினாலும்,
எவ்வண்ணமும் உன் வண்ணமே
எனத் தோன்றும் மாயத்தை என்ன செய்ய..??
வர்ணனைகளின் மேல் உனக்கு
நம்பிக்கை இல்லையெனினும்
எனது கவியால் உன் செவிநிறைக்க
விழைவாய்...!! ஒருகணம் ஒருகணம்
என குழவியாய் மனம் பிறழ்வாய்..!!
நீள்நதி ஓரமாக உன்
நினைவருந்தி நடக்கையில்
என் கை உன் மேலாடையைப்
பற்றியிருந்த கோலத்திலேயே இருக்கும்,
நீ இல்லையென்றாலும் கூட..!!
அடியாழத்திற்கு அமிழ்த்தி
வைத்து சிரிக்கிறோம்
நமதே நமதான
நினைவுகளை...
அவை காற்றின் அலைகளென்ற
பிரக்ஞையே இல்லாமல்..!!
---- அனலோன்
No comments:
Post a Comment