Thursday, 30 March 2017

பொன்வளை...!!

விண்ணிலிருந்து 
மண்ணெழுந்த இந்திரன் மகள்...என் தேவி...
என் பூமாரி...
பூமகள்...
பூஞ்சரடு...
பொன்வளை...!!

 பொன்வளை கையில்
செம்மலர்...
பத்து விரலில் 
செஞ்சூரியன்

 செங்காந்தள் புன்சிரிப்பில்
மூவுலகையும்
ஆற்றுப்படுத்துவாள்..!!

சென்னி நின் சூடத்தானோ
தேவன் உன்னை
அருளினான்
எமக்கு..?

மகளெனும் மண்நிலவு

பிறைநிலவுத் தாரகை...
பேரழகு தேவதை...
பைந்தமிழ் பாடுபொருள்...
பண்பொழில் பூரணள்...

கண்விழி ஓரத்தில் 
கனிவுதனை சூடியவள்..!
அக்கம்பக்கம் நோக்கிபின்
அளவுச்சேட்டை புரிவாள்...!!

எழில்மிகு மொழிதனில்
ஏற்றமிகு 
மெய்யுரைப்பாள்..!!
எட்டி வந்து தோள் பற்றி
என்னுள்ளம் தான்
கரைப்பாள்..!!

மென்பஞ்சு குழல் கொண்டு
சூல்மேகம்
தான் படைத்தாள்..!!

தாயுள்ளம் கொண்டு
தந்தையையும் தாங்குவாள்..!!
தகப்பன் ஆளுமை கற்று
தன்சுற்றம் தானாளுவாள்..!!

கொடுத்து வைத்த உந்தன்
தமையன் உன்
பாற்கடல் மடியில்
தன்மெய் கொள்வான்..!!

Friday, 3 March 2017

அடவுகளும் அரவுகளும்

அடவுகள் கட்டி 
ஆடுதிங்கு,
மக்களால் உருவான அரசு..!!

அரவுகள் கூடி,
நஞ்சிங்கு 
சமைத்து கருவான அரசு..!!

தன்மான உணர்வுகள்
கலந்து 
நாட்டை  ஆண்டது ரொம்ப பழசு..!!

உறவுகள் சேர்ந்து 
ஆள்வது தானே புதுசு ..


இதில்
 மத்தியம் என்ன ..மாநிலம் என்ன..!!  

பதவி தான முக்கியம் 
மத்ததெல்லாம் 
சாகட்டுமே முக்கியும் ..!!

காசு தானே சத்தியம் 
மிச்சதெல்லாம் 
தேவையில்ல அவசியம் ..!! 

(தாமிரபரணி )தண்ணி எடுக்கத் 
தடையில்ல ..இனி 
உன் இரத்தம் 
உறிஞ்சாலும் குத்தமில்ல ..!!

ஓட்டுக்கு 
கைய நீட்டி கேட்டுபுட்ட காசு 

நீ படும் 
பாட்டுக்கு 
அவன்
போட்டுபுட்டான் சபாசு ...!!

Thursday, 2 March 2017

புடவிச்சக்கரம்


காய் கனிந்துதிர்கையில் 
காம்பிடம் சொல்லிப் 
பிரிவதென்ன?

என்றோ ஒரு நாள் 
ஏதோ ஓர் உலகில் 
எங்கோ ஒரு கிளையில் 
மீண்டும் 
சந்திப்போம் என்றா ..?

புள் சிறகு மூத்து உதிர்கையில்,
பறவையிடம் பகர்ந்து 
செல்வதென்ன ..?

எந்தத் திசையில் 
எந்தப் பறவை 
எந்த நிறம் என்றா ..?

புற்றரவு செதில்கள் 
பிரிந்து விழுகையில் 
எண்ணிக் கொள்வதென்ன ..?

யா வடிவம் 
எந்தப் புற்று 
எந்த காடு என்றா ..?

இப்புடவியில் .. நாம் 
அறிந்ததுதான் என்ன ..?
புடவிச்சக்கரம் தனை 
சுழலச் செய்வான் 
பரம்பொருள் அவன் அறியக்கூடுமா ..??