Friday, 9 June 2017

மரணம் கொள்ளும் பயணம்





செங்கேழ் மேனி தொட்டு 
சிறிததிர்ந்து 
விலகி 
பின்னரும்  விண்ணில் மீண்டெழ 
முயல்கிறது 
சிறுபறவை உதிர்த்த இறகொன்று...!!

மரணித்த பின்னும் 
தன் பயணம் தன்னை 
கொண்டாடித் தீர்க்கிறது 
நெடுமரம் உதிர்த்த சருகொன்று...!!


நீள்நதி அலையில் 
மௌனமாய் பயணிக்கிறது
செஞ்சாந்து தீற்றல் களைந்து,
கரையோர காட்டு அய்யனார் 
சூடிய மாலையொன்று..!!

காட்டையாண்ட 
பெருஞ்சிறுத்தை காலம் கொண்டு 
வீழ்ந்திறக்க,
பருவுடல் தன்னை 
பகிர்ந்து நகட்டிச்செல்கிறது 
சிற்றெறும்புக்   கூட்டமொன்று..!!

No comments:

Post a Comment