நினைவேந்தல்
பலநாள் முன்பு
அகால மரணமடைந்த
நண்பனுடைய பிறந்தநாளின்
முகநூல் நினைவுறுத்தல்
குறுஞ்செய்தி
கண்டு
ஒரு கணம்
திகைத்து அடங்கியது உள்ளம்..!!
குழந்தைப் பலி கொண்ட
வீட்டின்
உத்திரத்தில்
கட்டிய தொட்டிலின்
கயிற்றுத் தடம் உடனே
மறைவதில்லை..!!
அய்யம்மாள் கிழவி
தனித்து வாழ்ந்து
மரித்துப்போன சிலவருடம் பின்னும்
பாக்குடைப்பான்
திண்ணையிலேயே இருந்தது..!!
தொழுவம் கட்டிய
லட்சுமியின் கழுத்துச் சலங்கை
கோமாரி கண்டு செத்த பின்னும்
அவ்வப்போது காற்றில் சலசலத்து
அவளை நினைவுறுத்தும்..!!
No comments:
Post a Comment