ஏனோ இன்றுன்னை எண்ணத் தோன்றியது..
எங்கோ ஆழ்மனதின் அடியாழத்தில்
நீ இரவு முழுவதும் வீசிய
ஓலைகாற்று அலைபாய்ந்துகொண்டிருக்கிறது..!!
இருளேறிய மண்வீடு..
பனை உத்திரங்களும் ஓலைக்கூரையையும்
பார்த்தபடி கிடந்துறங்கிய நினைவுகள்
படிமங்களாக உறைந்து கிடக்கிறது..!!
மின்சாரம் இல்லாத
அந்நாட்களில் சிம்னி விளக்கில்
புளிக்குழம்பையும்,கரண்டி முட்டையும்
இந்த 35 வருடங்களில் கிடைக்கவில்லை தாயே..!
அரிக்கேன் வெளிச்சத்தில்
கால் நீட்டி நீ அமர்ந்து, நிலவுபாட்டியாய்
மண்சுவரில் உன் நீண்ட பெருநிழல் விழுந்து
புரியாத மொழியில் பாடிய தாலாட்டில்
லயித்துக்கிடந்த சிறுவயதுப்பிராயம்
திரும்பாது எனிலும்,
காலங்கடந்தும் நெஞ்சில் நிக்குதம்மா..!!
டயர் செருப்பு அணிந்திருப்பாய் ..
பனைவெல்லம் காய்ச்சுகையில்
பதமாய் ..
சிறு குச்சி நீட்டி சவ்வுமிட்டாய் எடுத்து தருவாய்..!!
பொன்னாங்கண்ணி கண்மாயில்
பனைஓலை வெட்டி
கருவேல முள் தைத்து காத்தாடி செய்து கொடுப்பாய்..!!
ஐந்து கண் நுங்கெடுத்து பனைவண்டி
எனக்களித்தாய்..!!
என்ன தருவேன் நான் உனக்கு
ஏங்கி ஏங்கி உன்னை நினைப்பதைத் தவிர..?
அப்பாயி..
எனக்கொரு ஆசை ..நிறைவேற்றுவாயா ..??
எனக்கான தீர்ப்பு நாள் தாண்டி
விண்ணேகி நான் வருகையில்
நின்மடியில் படுத்து
ஓலைக்காற்றை சுவாசிக்க வேண்டுமம்மா..!!
உன் கண்டாங்கி சேலை நுனி
நான்பற்றி
கண்துயில வேண்டுமம்மா..!!
No comments:
Post a Comment