Friday, 9 June 2017

அனுதினம் புழுக்களோடு...




உளம் குவித்து 
நான் கோவிலில் நின்றிருக்கையில் 
உள்ளுணர்வு உந்த திரும்பிப்பார்க்கிறேன்..
என் உள்ளாடை விளிம்பை 
உற்று நோக்கி 
சட்டென விழி விலக்குகிறாய்..!!



இதில் நீ அடைவதென்ன ..?
அடைந்ததென்ன ..? எண்ணிப் பார்க்கிறேன்..!
என் அருவருவருப்பை மட்டுமே..!!



நாள்முழுதும் 
கணினி முன்  ஆவி படைத்து அல்லது 
வரவேற்பு பொம்மையாய் கால்கடுக்க நின்று 
பசி கிள்ள, சிலசமயம் மாதாந்திர அவஸ்தையும் 
கொண்டு,  மனிதக்கூட்டம் தளும்பி வழியும் 
பஸ்ஸைப் பிடிக்கையில் 
வேர்வையோடு வேர்வையாக 
உன் காமக்கைகளும் என்  மேல் ஊர்கின்றன ..!!



நீ எண்ணிப் பார்ப்பதில்லை..
எங்கள் உளவியல் சற்றே உன்னதமானது..!
வீடு சேர்ந்து ஆடை களைந்து 
பலமுறை குளித்தாலும் 
புழுக்கள் ஊறிய சீழாய் மேனியெங்கும் 
ஊர்ந்த தடங்கள் ..!!



நீ எண்ணிப் பார்ப்பதில்லை..
எங்கோ ...எவ்வண்ணமோ 
உன் வீட்டுப் பெண்களும் அதே 
உளவியல் கொண்டவர்களென..!! 



நீ எண்ணிப் பார்ப்பதில்லை..
உடலியல் கூறில்...ஒரு 
சமூக வடிகால் உங்களுக்கு 
கையளிக்கப்பட்டிருக்கிறது..!!
அதுவும் எங்களுக்கு இல்லை..
ஒருவகையில் நாங்கள் 
சபிக்கப்பட்டவர்களே...!!



நீ எண்ணிப் பார்ப்பதில்லை..
சற்று முன்னேறி 
அலுவலக மேற்படியில் உனக்கு 
மேல் அமர்ந்திருக்கையில், 
எனது ஒழுக்கம் சார்ந்த விவாதமே 
உனது அலைபேசிப் பகிரியில் அதிகம்..!!



நீ எண்ணியே பார்ப்பதில்லை..
அனுதினம் நீ வழிபடும் 
ஆதி முதல் தாயின், கருப்பையே 
எங்களுக்கும்..!!
கொல்வேல் கொற்றவையின் 
உருவமைப்பே எங்களுக்கும்..!!



No comments:

Post a Comment