Wednesday, 16 March 2016

அவர்கள் அறிந்திருக்கவில்லை

அவர்கள் அறிந்திருக்கவில்லை
அந்நாளைய 
பார்வை பரிமாற்றங்கள்
என்றென்றுக்குமானவை அல்ல என்று ..!!
அவர்கள் அறிந்திருக்கவில்லை
அவர்களின் குறுஞ்செய்திகள்
நீணாள் பயணிக்கப்போவதில்லை என்று...!!
அவர்கள் அறிந்திருக்கவில்லை
அவனின் ஆயுள் நாட்கள்
காதலின் தொடக்கத்தில் எண்ணப்பட்டது என்று ..!!
அவர்கள் அறிந்திருக்கவில்லை
யுத்த களங்களில்
ஆட்டுக்குட்டிகள் மேயலாகாதென்று ...!!
அவர்கள் அறிந்திருக்கவில்லை
முரட்டு ரயில்
பூக்களை முகர்ந்து
பார்ப்பதில்லையென்று ..!!
அவர்கள் அறிந்திருக்கவில்லை
சாதி என்பது
உள்ளூறிய சீழ் என்று ..!!
அவர்கள் அறிந்ததெல்லாம்
தூய வெண்பனி நிகர் காதலைத்தான் ..!!
அவர்கள் அறிந்ததெல்லாம்
ஆதி மனிதன் ஆராதித்த காதலைத்தான் ..!!

கிணற்றடி தவளைகளின் கூப்பாடு ..!!

கிணற்றடி தவளைகளின் கூப்பாடு ..!!
-----------------------------------------------------
பெருமழை கண்டு
ஓய்ந்திருந்தது ..அவ்விரவு ..!!
கிணற்றடி தவளைகளின்
நேரங்கெட்ட கூப்பாடு ..
அவளுக்கு,
முரண்களின் மொத்த உருவம் அவன்.
அவனுக்கு,
கூச்சலின் பருவடிவம் அவள் .
முரணியக்கத்தால் மட்டுமே
நகரக்கூடியது வாழ்க்கை ..!!
அன்பின் ஆழங்கள் புரிந்துவிட்டால்
சுலபமான கணக்கு அது..!
ஏனோ .. அவளுக்குப் புரியவில்லை
அல்லது புரியவைக்க அவன் முயலவில்லை.
நான்கு வயது மழலை தூங்குகிறாள்
டோராவின் கனவுகளுடன் ..!!
"அம்மா நாளைக்கி ஜூ வுக்கு கூட்டிப்போமா "
கிணற்றடி தவளைகளின்
நேரங்கெட்ட கூப்பாடு .
இன்றிரவு சீக்கிரம் புலர்ந்து விட்டால் நல்லது
மழலையைத் தூக்கும்போது
வியர்க்கிறது ..!! விடிந்த பின்னர்
ஒருபோதும்
வியர்க்கப்போவதில்லை.
கிணற்றடி தவளைகளின்
நேரங்கெட்ட கூப்பாடு .
விடிந்தே விட்டது ..
கிணற்றடியில் மழலை
தவற விட்ட டெடி பொம்மையும்
அவளின் கழற்றி வைக்கப்பட்ட தாலியும்...!!
கிணற்றடி தவளைகளின்
கூப்பாடு ஓய்ந்திருந்தது..!!